p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Friday, December 07, 2007

பெண்

கற்றறிந்தார் பெண்கள் தங்கள்
கரும் இருளை அகற்றினார்
சுற்றி வந்தார் விண்வெளியை(ச்)
சுழன்று வென்றார் போர்களில்
கொற்றவளாய் உள்ளார் நன்றாய்(க்)
குடும்பங்களைக் காக்கிறார்
பற்றறுந்து தவிக்கிறார்கள்
பிறந்த மண்ணைப் பிரிந்ததால்

அடுப்படியின் வாழ்வு நின்று
அகலக் கால் பதித்தனர்
எடுத்த வேலை எதுவெனினும்
எளிதாய் வெற்றி கண்டனர்
ஒடுக்க எண்ணும் தீயோர்தன்னை
ஓட ஓடத் துரத்தினர்
கடுக்கும் காதல் கண்ணைமூட(க்)
கனதி யுற்றார் வயிற்றிலே

அழகு மட்டும் பெண்களில்லை
அனைத்தும் பெண்கள் என்றனர்
உலகம் எல்லாம் உணரவைத்தார்
உண்மைப் பெண்கள் வாதத்தை
பழமை வென்றார் புதுமைகொண்டார்
பயத்தை நீக்கிச் சென்றிட
களவு உற்றார் கருகிநின்றார்
கயவர் செய்த பாவத்தால்

தலைகள் சுற்றும் விலையில்(ப்)
பெண்ணைத் தாரமாக்கும் தமிழரை
உலையில்ப் போட்டு உஷ்ணமாக்கத்
துணிந்தார் என்ற போதிலும்
சிலையாய் உள்ளார் சிற்பமானார்
சிறகொடிந்த பறவையாய்
விலைகள் கூறி அழகைவிற்கும்
விந்தை என்று அகன்றிடும்

Sunday, April 09, 2006

இளவேனிற் காலம்

இளவேனிற் காலம்
இதமான தாளம்
இதயமோ இனிக்கின்ற கோலம்

களவேது மின்றி
கருமிருள் குன்றி
காதலில் வாழ்வுற்றார் ஒன்றி

நிலமகள் பாட
அலைமகள் தேட
நிலவுடன் கூடிவிளை யாட

அழகான நாடு
அதிலொரு வீடு
அமைதி வாழ்வின்பத் தோடு

Monday, March 27, 2006

உன்னால் உறங்க முடிகிறதோ?

வானை மறைத்துமழை பொழிகையிலே
வருவதை உண்ர்த்த ஒலி தருகையிலே
ஊனை உருக்கும்குளிர் பிறக்கையிலே
உடலை வருத்தி நாம் உழைக்கையிலே
சேனை மண்ணைக் காக்கையிலே
செழிப்புடன் நல்யாழ் ஒலிக்கையிலே
பூனை போல்நீ உறங்குவதோ
புலியாய் மீண்டும் எழுதமிழா!

பகலை மறைக்கும் மைமுகில்கள்
பார்வை கெடுக்கும் மின்னல்நதி
நகலை ஒழிக்கும் நாகரீகம்
நாறி உலையும் மனிதநேயம்
அகல விரியும் ஆதிக்கம்
அதனை அழிக்க அரியபடை
பகலைப் பகலாய் இருத்திடவே
பருதி போல்நீ எழுத்மிழா!

மண்ணைக் காத்த மாவீரர்
மடிவை யெண்ணாப் போர்வீரர்
கண்ணை மூடா வேவுப்புலி
கவலை யற்ற கரும்புலிகள்
திண்மம் நிறைந்த கடற்பிரிவு
திறமை மிக்க வானெதிர்ப்பு
உண்மை யீழம் பிறக்கையிலே
உன்னால் உறங்க முடிகிறதோ?

Saturday, October 22, 2005

கதிரவன்

தங்குதடை யின்றி வரும்
தென்ற லொடு கூடி
கங்குலை விலக்கித் தமிழ்(க்)
குயிலி னிசை பாடி
பொங்கு மெழில் நங்கையென(ப்)
புதுப் பொலிவு காட்டி
எங்குமொளி பாச்சி யதை(த்)
திங்களுக் கும் ஊட்டி

ஞாலமது போற்று கின்ற
நல்ல பொற் கதிரே
காலமெலாம் வாழ்வு தரும்
கருணை யுள்ள உயிரே
கோலமது போடு கின்ற
வான வில்லின் முதலே
ஞாலமதைத் தோற்று வித்த
நா மறிந்த இறையே

மண்ணு மில்லை விண்ணு மில்லை
மா கடலு மில்லையே
எண்ண எண்ண அழகுதரும்
ஏது மிங்கு யில்லையே
உண்ணுதற் குணவு மில்லை
உழ வெதுவு மில்லையே
கண் கவரும் தாரணியின்
காதலனே வான் எழுவாய்

Thursday, August 18, 2005

தெய்வம்?

மனித னென்றும் தெய்வ மாகலாம்
மாட்சிமை மிக்க வீர னாகலாம்
தனித்து வமுள்ள இறைவ னாகலாம்
தாரணி போற்றும் அறிஞ னாகலாம்
புனித மானதோர் கடவு ளாகலாம்
பொறுமை யிலிந்தப் பூமி யாகலாம்
கனிகொ டுத்திடும் விருட்ச மாகலாம்
கல்வி தந்திடும் குருவு மாகலாம்

துன்ப முற்றவர் துயர் துடைக்கலாம்
தூய சிந்தனை தனைவ ளர்க்கலாம்
அன்பு கொண்டுமே உதவி செய்யலாம்
அரவ ணைத்துமே மகிழ்ச்சி காணலாம்
தன்ன லமிலா தெங்கும் வாழலாம்
தாழ்ச்சி யுற்றவர் விழிது டைக்கலாம்
என்றும் யாவர்க்கும் துணையு மாகலாம்
இறைவ னாகவே மனித னாகலாம்

மற்றவர் பொருட்களில் ஆசை கொள்வதும்
மந்திக ளாக வீதியிற் செல்வதும்
கற்றது போல நடக்கா திருப்பதும்
கண்ட வார்த்தைகள் கதைத்துத் தொலைப்பதும்
குற்ற மனத்துள் மாய்ந்து கிடப்பதும்
குறுகு றுத்துப் பொறாமை கொள்வதும்
அற்றவ னாக இருப்பவன் எவனோ
அவனே என்றும் தெய்வ மாகிறான்

மனிதனாய்க் 'கண்ணன்' பிறக்க வில்லையா?
மாபெரும் தெய்வமாய் விளங்க வில்லையா?
தனிப்பெரு மரசாய்ப் 'புத்தர்' இல்லையா?
தரணியை யாட்சி செய்ய வில்லையா?
புனிதராய் 'யேசு' தோன்ற வில்லையா?
புகழுடன் 'ந்பிகள்' வாழ வில்லையா?
இனியவர் பலபேர் மனித ரானவர்
இறைவ னாகவே மாற வில்லையா?

நட்பால் மனிதனும் தெய்வ மாகலாம்
நீதிநேர் மையாய் வாழ்ந்து கொள்ளலாம்
எட்டுத் திக்கிலும் உதவி செய்பவன்
என்றும் எங்கும் இறைவ னாகலாம்
பட்ட துன்பத்தை மறக்கச் செய்பவன்
பாரினி லென்றும் கடவு ளாகலாம்
கெட்ட சிந்தனை மறந்து நிற்பவன்
கருணை யினாலே வைய மாளலாம்

துன்ப முற்றவர் துயர் துடைப்பவன்
தூயவ னவன் தெய்வ மாகிறான்
இன்பம் தந்தொரு இன்னல் தீர்ப்பவன்
இன்றே இங்கே இறைவ னாகிறான்
தன்னினம் காக்கத் தன்னை யிழப்பவன்
தன்னல மற்ற கடவு ளாகிறான்
அன்புடன் எவர்க்கும் சேவை செய்பவன்
அவனி மீதிலே தெய்வ மாகிறான்.

(பூபாளராகங்கள் 2005)

Monday, June 20, 2005

புத்தர் பெருமானின் புலம்பல்

கீதம் இசைக்கும் கருங்குயிலின் ஒலியமுதும்
நாதம் பரப்பும் நல்லியற்கை வனப்பதுவும்
வேதம் உரைக்கும் வெண்முகிலின் மனத்தவரும்
பேதம் இன்றிவரும் பக்தர்களின் பணிவிடையும்

நாளும் கேட்டதனில் நான்திழைத் திருக்கையிலே
பாழும் கொடுமனத்தோர் பறித்தனரோ? உரிமைதனை
வாழும் இடத்தைவிட்டு சந்திகளில் எனைநிறுத்தி
ஆளும் வர்க்கமென அடிமைகொள்ளத் துணிந்தனரோ?

சுட்டெரிக்கும் செஞ்சுடரோன் ஒளிப்பிளம்பு சுட்டெரிக்க
பட்டவுடன் பற்றிக்கொள்ளும் தூசியெலாம் பட்டுவிட
கெட்டதுர் நாற்றமெலாம் கிளம்புகின்ற வீதிகளில்
மட்ட மானவர்கள் மகிழயெனை நிறுத்தினரோ?

துன்பம் கண்டுள்ளம் துடிதுடித்து எழுந்தவன்யான்
மன்னன் முடிதுறந்து மகிழ்வுடனே இருந்தவன்யான்
என்னை முதற்படுத்தி என்சீடர் நீரெல்லாம்
சின்னத் தனமாக அரசியலில் அலைவதுவேன்?

ஒன்றும் புரியாத புதிரெல்லாம் புரிந்திடவே
தன்னம் தனியிருந்து தவமிருந்து உரைத்தவற்றை
நன்மைதரும் நல்லவற்றை நலியவிட்டு நஞ்சுடனே
உண்மை தனைமறந்து ஊதாரி யாவதுவேன்?

ஆளும் அரசிற்கு அறிவில்லை யென்றிருக்க
நாளும் எனைத்துதிக்கும் நன்றிகெட்ட சீடர்களே!
மாளும் மக்களது மனத்துன்பம் போக்காது
கோளும் கொடுங்கருத்தும் கொடுத்தவரை வளர்ப்பதுவேன்?

இனிது எதுவென்று இனிதாக உரைத்துள்ளேன்
புனிதப் பாதைதனைப் புரியவைத்துச் சென்றுள்ளேன்
மனித வாழ்வதுவின் மகத்துவங்கள் பகர்ந்துள்ளேன்
கனிவாய்க் கடைப்பிடிப்பீர் காலம்வெல்லக் கைகொடுப்பீர்.

Saturday, June 11, 2005

உண்ணியாய் மனிதன்

நாயினைப் பற்றிப் பிடித்தது உண்ணி
நன்றி செலுத்திடும் உயிரியென் றெண்ணி
தாயினைப் போன்று செலுத்துவேன் பாசம்
தாயகம் இதுவெனக் கொண்டது நேசம்

விரட்டி விரட்டிநாய் துரத்திய போதும்
விட்டிட வில்லை நட்புள்ள உண்ணி
முரட்டுத் தனமாக மோதிய போதும்
முத்தம் செலுத்தியே வந்தது உண்ணி

மோதல் தொடர்ந்து நடந்தது எனினும்
முறிவின்றி யிருந்தது உண்ணியின் அன்பு
காதல் வளர்ந்து கனிந்துமே இனித்தது
கடியினால் நாயோ உண்ணியைச் சினந்தது

சாலை ஓரத்தில் கிடந்தது நாயும்
சரிந்திட்ட மெய்யில் உயிரற்று இருந்தது
வேலை யற்ற உடலிது என்பதால்
வேறிடம் தேடிடக் கழன்றன உண்ணிகள்

ஈக்களோ நாய்க்காய் ஒப்பாரி யிட்டன
இரைந்தன புரண்டன புலம்பி யழுதன
பூக்களாய் அவைகள் மொய்த்துமே நின்றன
புழுக்களும் வந்து துக்கம் செலுத்தின

ஞாலத்தில் வாழ்ந்திடும் மனிதனும் இதற்கு
நல்லதோர் உதாரணம் ஆகுறான் பாரீர்
காலத்தின் கோலத்தால் நிகழ்ந்திடும் கருமத்தில்
சுயனல உண்ணியாய் மனிதனைக் காணலாம்

இருக்கும் போதே போற்றுவோர் ஒருவகை
இறந்த பின்னரே போற்றுவோர் ஒருவகை
தரணியில்ப் பிறக்கமுன் இகழ்பவர் ஒருவகை
தரணியைத் துறக்கமுன் இகழ்பவர் ஒருவகை

எதுஎது எப்படி நடந்திட்ட போதும்
அவர்களைத் திருத்திட நினைப்பது கடினம்
அதுஅவர் தாமே திருந்திட்டா லன்றி
அவரென்றும் மனிதராய் வாழ்ந்திடும் உண்ணி.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது